என்னவளுக்காக...

னதருமை அவளே...
என்னுள் விழுந்து 
என்னை புதைத்த 
ஏகாந்த சித்திரமே....
இயர்போன் மாட்டிக் கொண்டு
இசைகள் கொஞ்சம் கேட்க கூட
செவிகள் இசைவதில்லை...
சிலாகித்து திரியக் கொஞ்சம்
செவி இன்பம் கேட்கிறேன்
அண்ட வெளியில் சிதறிக்கிடக்கும்
அத்தனை சில்லுகளிலும்
அழுத்தமாய் திருத்தமாய்
யாவருக்கும் அகப்படாத 
உந்தன் பிம்பங்களின் 
ஆனந்த வகிடுகள்
வாரிச் சுருட்டிக்கொள்கின்றன என்னை...
பிறை மோதும் கண்மணியே
மின்சாரமற்ற மாடிவீட்டுத் திண்ணையில் 
தலைசாய நீ கொஞ்சம் இடம் கொடுமடி...
கவிதைகளோடு பேசி சிரிக்கும்
யாருமற்ற என் தனிமையை
கொஞ்சம் ஆக்கிரமியடி...
நெருடல்களை நீர்த் திவலைகளில் 
தாங்கி நிற்கும் கண்களுக்கு
சிறிது ஆதரவு தருமடி...
ஆகப் பெரிய கூட்டத்தினுள்
யாருமற்ற மனிதனாய்
உம்மை விழியில் தைத்துக் கொண்டு
ஊசலாடும் உயிரென்பதை
அனலின் நிறைவென்பதா?...
குளிரின் குறையென்பதா?...
ஆகச்சிறந்த கவிஞர்களெல்லாம்
அழகாய் சொல்லிவிட்டார்கள்...
உன்னால் என்னுள் ஊறும்
குளிர் கலந்த அனலினை 
குறிப்பெடுத்துக் கூற 
குறைவில்லாத வருடங்கள் தேவைப்படும்....


-சரவணன் கந்தசாமி...

Comments

Popular posts from this blog

பிஞ்சு மனம்

எண்கள்

சிநேகிதம்